லசா பாதாள உலகத்துடன் தொடர்பு; 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை

லசா பாதாள உலகத்துடன் தொடர்பு உள்ளவர் என்றும் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்துவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர பல வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.

இதேவேளை, லசாவின் கொலையைத் துப்பு துலக்க 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, நான்கு குழுக்கள் தற்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். 

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த கொலைக்காக நான்கு தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மிதிகம லசா என்ற லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை 10.30 மணியளவில் அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். 

தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்