நடிகர் விஜய் வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து நடிகர் விஜய் வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு – கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்தி 90பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 39பேர் உயிரிழந்தனர். இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு ஒரு பொலிஸ் ஆய்வாளர் தலைமையில் 15 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக மத்திய அரசு அவருக்கு ஏற்கனவே ‘Y’ பிரிவு பாதுகாப்பை வழங்கி உள்ளது. தற்போது கரூரில் நடந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு பாதுகாப்பு கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு முதல் பொலிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

விஜய் வீடு இருக்கும் பகுதிக்கு சந்தேகப்படும் வகையில் வரும் அனைவரையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் விஜய் வீட்டின் அருகே சாலைத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை நீலாங்கரையில் விஜய் தற்போது தங்கி உள்ள நடிகர் விஜய் வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அவரது வீடு உள்ள சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து பொலிஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.