காற்றாலைக்கு எதிராக கட்டைக்காட்டில் போராட்டம் வெடித்துள்ளது.
மன்னார் காற்றாலை திட்டத்தை எதிர்த்து மக்கள் எழுப்பிய ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் பங்கு தந்தையர்கள் மீதும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர்.
இத்தாக்குதலை கண்டித்து வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் அமைதி வழி போராட்டம் ஒன்று இன்று (28) முன்னெடுக்கப்பட்டது
மன்னார் மக்களுக்கு பாதிப்பாக அமையக்கூடிய காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது அரச அடக்குமுறை பயன்படுத்தப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீதும், அருட் தந்தையர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை கண்டித்தும் மன்னார் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவழிக்கும் முகமாக வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கட்டைக்காடு பொதுமக்களின் ஒழுங்குபடுத்தலில் கட்டைக்காடு பங்கு தந்தை தலைமையில் இன்று காலை 7:30 மணி அளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அழிக்காதே அழிக்காதே மன்னாரை அழிக்காதே, வேண்டாம் வேண்டாம் காற்றாலை திட்டம் வேண்டாம்.
அள்ளாதே அள்ளாதே எமது மண்ணை அள்ளாதே போன்ற வாசகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காற்றாலைக்கு எதிராக கட்டைக்காட்டில் போராட்டம் நடந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்டைக்காடு பங்கு தந்தை வசந்தன் அடிகளார்,
மன்னார் தீவில் எமது மக்களுடைய சாத்வீக போராட்டம் அரசு இயந்திரத்தால் ஒடுக்கப்படுவதை கண்டித்து கட்டைக்காடு பொதுமக்களாக நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
மன்னார் எங்களுடைய பூர்வீக சொத்து, அபிவிருத்தி என்னும் பெயரில் மன்னார் மக்கள் பாதிக்கப்படுவதையும் மன்னாருடைய வளங்கள் சூரையாடப்படுவதையும் வன்மையாக கண்டித்து அப்பகுதி மக்கள் சாத்வீகமான போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆனால் இந்த அரசாங்கம் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி மன்னார் மக்களுடைய சாத்வீக போராட்டத்தை அசிங்கப்படுத்தியுள்ளார்கள் அத்தோடு அப்பாவி மக்கள், அப்பாவி மத குருமார்களை தாக்கி இருக்கிறார்கள்.
உடனடியாக இந்த அராஜகம் நிறுத்தப்பட வேண்டும். பல வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் ஏனைய அரசாங்கங்களை போன்றுதான் செயல்பட எத்தனிக்கின்றார்கள் என்றார்.
