மண்ணகழ்வுக்கு வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான், காரைக்காடு பிரதேசத்தில் மண்ணகழ்வுக்கு வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம் அடைந்துள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வாளர்களினால் தோண்டப்பட்ட பாரிய பள்ளத்தாக்கில் தேங்கியிருந்த நீர் நிலையில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக அதில் இறங்கிய அவர், ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல் காணாமற்போயுள்ளார்.

உறவினர்களும் பொதுமக்களுமாக இணைந்து தேடுதலில் ஈடுபட்ட போது சடலமாகவே இவரை மீட்டுள்ளனர்.

வேப்பவெட்டுவான் – பாலர்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய ஜோசப் தவராசா என்பவரே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்துக்கு ல்ச்சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடலத்தை அனுப்பி வைத்தார்.

உடற்கூற்று பரிசோதனை முடிவுற்றதும் பிரேதம் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

(உமர் அறபாத் -ஏறாவூர்)