கார்ட்மோர் அருவிப்பகுதி சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மஸ்கெலியா – கார்ட்மோர் அருவி அமைந்துள்ள பகுதியை அடுத்த ஆண்டுக்குள் சுற்றுலாத் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கார்ட்மோர் அருவிப் பகுதிக்குக் கண்காணிப்பு விஜயமொன்றில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இத்தகைய பகுதிகளை உருவாக்குவதன் மூலம், அந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
பல்வேறு நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இந்தப் பகுதியை சுற்றுலாத் தளமாக உருவாக்க எதிர்பார்க்கப்படடுள்ளது.
இந்தப் பகுதிக்குத் தற்போது பல சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும், அவர்களுக்குத் தேவையான வசதிகள் அங்கு இல்லை. அங்கு உலங்குவானூர்தி தரையிறங்குவதற்கான இடங்களையும் நிர்மாணிக்க முடியும்.
இதுபோன்ற நவீன வசதிகளை இங்கு உருவாக்குவதற்கு அடுத்த பாதீட்டிலிருந்து நிதி ஒதுக்குவோம். நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வீதியை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கார்ட்மோர் அருவிப்பகுதி சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் பிரதியமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

