பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடுவார் என்று பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்திருக்கிறார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி நேரில் தலையிட்டு வெகுவிரைவில் தீர்வை வழங்குவார் என்று தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் கொட்டகலையில் தெரிவித்தார்.
கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் அதிபராக (2022) ஹட்டன் கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளராக சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி மாயழகு சந்திரலேகா கிங்ஸ்லி (SLEAS class I) அவர்களின் பணி நயப்பு விழா கொட்டகலை ஆசிரியர் கலாசாலை சமூகத்தினரால் கொட்டகலையில் நடத்தப்பட்டது.
கலாசாலை அதிபர் சு.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் மாணவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கல்வி வெளியீட்டுத் திணைக்கள முன்னாள் ஆணையாளர் நாயகம் சு. முரளிதரன் கலாசாலையின் முன்னாள், இந்நாள் விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரிய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் பிரதியமைச்சர் பிரதீப் ஊடகங்களிடம் கருத்து கருத்து தெரிவித்தார்.
” மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கிலேயே உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்தோம். இதற்கு எவ்வித நிபந்தனையும் இன்றியே சில தரப்புகள் ஆதரவு அளித்தன.
ஆட்சி அமைப்பதற்காக நாம் எந்தவொரு பேரம்பேசலிலும் ஈடுபடவில்லை. எவ்வித ஒப்பந்தமும் கிடையாது. மக்கள் வழங்கிய ஆணையை மதித்தே செயற்பட்டு வருகின்றோம்.
மலையகத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் நிச்சயம் விசாரணைகள் இடம்பெறும். எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் சட்டத்தின் பிரகாரம் நிச்சயம் தண்டனை வழங்கப்படும். எமது ஆட்சியில் குற்றவாளிகள் தப்ப முடியாது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடுவார். தலையிட்டு ஜனாதிபதி தீர்வை வழங்குவார்.
உள்ளக மட்டத்தில் பேச்சுகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்தவகையில் ஜனாதிபதி மிக விரைவில் நடவடிக்கை எடுப்பார். சிலவேளை அரசாங்கமும் இதற்குரிய தீர்வை வழங்கலாம்.” – என்றார்.

க. கிருஷாந்தன்
