வவுனியா மாநகர சபை குறித்து புதிய முடிவு

வவுனியா மாநகர சபை குறித்து புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
வவுனியா மாநகர சபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோ விற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டுள்ளதாக இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ. விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….
வவுனியா மாநகர சபையில் தமிழ்க்கட்சிகளிற்கிடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அந்த வகையில் கூட்டணியின் பங்காளிக்கட்சியான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தைச் சேர்ந்த உறுப்பினருக்கு முதல் மூன்று வருடங்களுக்கு மாநகர முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மூன்று வருடங்களுக்குப் பின்னரான காலப்பகுதியில் சங்கு கூட்டணியின் மற்றொரு பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு(ரெலோ) முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எனவே குறிப்பிட்ட காலப்பகுதியில் மாநகரசபையின் முதல்வராக ரெலோவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று அறிக்கையில் உள்ளது.
