வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக தவமலர்

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவானார்.
வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (18) வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தவமலர் சுரேந்திரநாதனுக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர்.
தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர்.
பிரதி தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாகதம்பி பத்மநாதன் தெரிவானார்.
