இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொசன் நிகழ்ச்சி

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொசன் நிகழ்ச்சி சிறப்புக் கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பில் பொசன் பௌர்ணமியை நினைவுகூர்வதற்காக ‘ஞானத்தின் எதிரொலிகள் – கற்களின் பிரகாசம், ஓவியங்களின் உயிரோட்டம்” என்ற தலைப்பில் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பீகார் அருங்காட்சியகம் மற்றும் புது டில்லியில் உள்ள நவீன கலைக்கூடம் ஆகியவற்றுடன் இணைந்து, கொழும்பு தேசிய நூதனசாலை வளாகத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘ஞானத்தின் எதிரொலிகள் – கற்களின் பிரகாசம், ஓவியங்களின் உயிரோட்டம்” என்ற தலைப்பிலான இந்தச் சிறப்பு கண்காட்சியைக் கொழும்புவிலுள்ள தேசிய நூதனசாலை வளாகத்தில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஏற்பாடு செய்தது.
16 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் காணப்பட்ட புத்த பெருமானின் ஆறு சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இக்கண்காட்சியை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஏனைய பிரமுகர்கள் முன்னிலையில் இன்று ஆரம்பித்து வைத்தார்.

ஒரு வார கால கண்காட்சி இந்தியாவின் வளமான பௌத்த சிற்பக்கலை மற்றும் ஓவிய மரபைக் கொண்டாடுவதுடன் கிமு 1 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு வரையிலான தனித்துவமிக்க புத்த சிற்பங்களின் அரிய பிரதிமைகளை காண்பிக்கின்றது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டு தற்போது பீகார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன
புராதன புத்தர் சிற்பங்களின் அற்புதமான பிரதிமைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் ஆரம்பகால பௌத்த கலைஞர்களின் ஆன்மீக ஆழத்தையும் நேர்த்தியான கைவினைத்திறனையும் பிரதிபலிக்கின்றன.

மேலும் இவை உருவான காலத்திலிருந்து இதுவரையான பௌத்த கலை மற்றும் பக்தி வெளிப்பாடுகளைக் காண பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றது.
இக்கண்காட்சியில் புது டில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் உள்ள புத்தபெருமானது அரிய ஓவியமும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது,
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொசன் நிகழ்ச்சி கண்காட்சி 2025 ஜூன் 10 முதல் 15 வரை கொழும்பு தேசிய நூதனசாலையில் பொதுமக்களின் பார்வைக்காக திறந்திருக்கும்.

அத்துடன் பொசன் போயா தினத்தை முன்னிட்டு, கொழும்புவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், ஜாதகக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஐந்து அமர் சித்திரக் கதை நூல்களின் சிங்கள மொழிபெயர்ப்புகளின் 600 பிரதிகளை 2025 ஜூன் 8 அன்று நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்வில் விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.
பிலியந்தலை, கொலமுன்னவில் உள்ள ஸ்ரீ பிம்பராம அறநெறிப் பாடசாலை மற்றும் இரத்மலானையில் உள்ள ஸ்ரீ சித்தார்த்த அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.
சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் இயக்குநர் பேராசிரியர் அங்குரன் தத்தா, இந்நூல்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்த முயற்சியானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பகிரப்பட்ட கலாசார மற்றும் இலக்கிய மரபினை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், இளம் மாணவர்கள் புத்தரின் காலத்தால் அழியாத ஒழுக்க விழுமியங்களையும் போதனைகளையும் ஆக்கபூர்வமான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய அணுகுமுறை மூலம் ஆய்ந்தறிய ஊக்குவிக்கின்றது.
இவ்வாறான முன்னெடுப்புகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொதுவான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், பகிர்ந்து கொள்ளவும், கொண்டாடவும் இந்தியா கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.
இது புத்த பெருமானின் காலத்தால் அழியாத போதனைகள் மூலம் இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஆழமாக வேரூன்றிய நாகரிக உறவுகள் மற்றும் நிலைபேறான கலாசார பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப் பிரிவு
