உள்ளூராட்சி சபைகளிலும் ஊழல் விசாரணை

உள்ளூராட்சி சபைகளிலும் ஊழல் விசாரணை பிரிவுகளை நிறுவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
ஊழல், முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி சபைகளிலும் ஊழல் விசாரணை பிரிவுகளை ஆரம்பிக்க ஆளுநர்கள் கோரிக்கை விடுத்ததோடு அதற்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கினார்.
மாகாணங்களில் உள்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, அவை தொடர்பிலான சவால்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.
அந்தப் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட மும்மடங்கு நிதி மாகாண சபைகளுக்குக் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இவ்வாண்டு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.
அந்த நிதிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது
