கிளியிருக்க குரங்கு பிடித்தவர்மீது கத்திக்குத்து!

கிளியிருக்க குரங்கு பிடித்தவர்மீது கத்திக்குத்து!: தனது சகோதரியைத் திருமணம் செய்திருக்கும் நபர் வேறொரு பெண்ணுடன் காதல் வயப்பட்டதைப் பொறுக்க முடியாதவர் அந்த நபரைக் கத்தியால் குத்திய சம்பவம் கொட்டகலையில் நடந்துள்ளது.
குரங்காட்டியைக் கத்தியால் குத்தியும் அவரது மோட்டார் சைக்கிளுக்குத் தீவைத்துக் கொளுத்தியும் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்ட அந்த அன்புச் சகோதரனையும் அவரது நண்பரையும் திம்புள்ள பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவத்தில் கொட்டகலை பகுதியை சேர்ந்த நபரொருவரே காயமடைந்துள்ளார். அவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொட்டகலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை சட்டபூர்வமாக திருணம் செய்துள்ளார்.
எனினும், கொட்டகலை பகுதியை சேர்ந்த மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவை பேணி வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டபூர்வமான மனைவிமீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக தாக்குதலுக்கு இலக்கான பெண், குடும்ப உறுப்பினர்கள் சகிதம் நேற்று திம்புள்ள, பத்தன பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
விசாரணையின்போது பொலிஸார் முன்னிலையில், தனது மனைவியுடன் சமரசத்துக்கு வருவதாக அந்நபர் கூறியுள்ளார்.
வெளியே வந்த பிறகு சட்டத்துக்குப் புறம்பான உறவை பேணும் பெண்ணுடன் இணைந்து கொட்டகலை பகுதியில் செல்பி படம் எடுத்துள்ளார். அதனைக் கண்ட, அந்த நபரின் சட்டப்பூர்வமான மனைவியின் சகோதரன், கிளியிருக்க குரங்கு பிடித்தவர்மீது கத்திக்குத்துத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
அவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு அவருக்குச் சீதனமா மாமனாரால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் கொளுத்தியுள்ளார்.
அதன்பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
