தேசபந்துக்கு எதிரான பிரேரணை அரசியலமைப்புக்கு முரண்

தேசபந்துக்கு எதிரான பிரேரணை அரசியலமைப்புக்கு முரண்: பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக, திசைகாட்டி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது என்று முன்னாள் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோன் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொள்வது பாராளுமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் எனவும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தற்போது பிரச்சினை என்னவென்றால், முன்னாள் ஜனாதிபதி தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தது. அந்த நியமனத்தை மேற்கொள்ளும்போது அரசியலமைப்புச் சபையின் அனுமதி பெறப்பட்டதாக சமர்ப்பிப்புகள் முன்வைக்கப்பட்டன.
இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் மூலம் அவரது நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் அல்ல. நீதிமன்ற உத்தரவு இன்னும் அமுலில் உள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவு அமுலில் இருக்கும் அதே வேளையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் கையழுத்திட்டு தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு பிரேரணை சமர்ப்பித்துள்ளனர். எனவே, தேசபந்துக்கு எதிரான பிரேரணை அரசியலமைப்புக்கு முரண்.
2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், அத்தகைய பிரேரணையை அப்போது பதவியில் இருந்த பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
ஆதலால், உச்ச நீதிமன்றத்தால் அவர் பொலிஸ் மாஅதிபர் இல்லை என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது அரசியலமைப்புச் சட்டத்தின், 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க சிரேஸ்ட அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளுக்கு முற்றிலும் முரணானது.
அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்காக ஒரு குழுவை நியமிக்க வேண்டும், மேலும் அந்தக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்:
அநுராதபுரம் காமுகனுக்குத் தடுப்பு காவல்
