இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
‘டித்வா’ புயலை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் வௌியிட்ட அவர் அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தமது கவலையை வௌியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நேரத்தில் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக இந்தியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரழிவுக்குப் பின்னர் இந்தியா வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார்.
மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்பியமைக்குப் பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகவும், நிவாரணம் வழங்குவதற்காகவும் முன்னெடுக்கப்படும் ‘சாகர் பந்து’ நடவடிக்கை திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு உறுதியளித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
