அமெரிக்காவிலிருந்து 1700 இந்தியர்கள் வெளியேற்றம்

சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறினார்கள் என்ற குற்றச்சாட்டின்கீழ் அமெரிக்காவிலிருந்து 1700 இந்தியர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய வெளிநாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வருகிறது அமெரிக்க அரசாங்கம்.

இந்தியாவைச் சேர்ந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

இரண்டாம் முறையாக அதிபர் பொறுப்புக்கு டிரம்ப் வந்த பின்னர், இவ்வாண்டு ஜனவரி 20ஆம் தேதி முதல் கடந்த ஜூலை 22ஆம் தேதி 1,703 இந்தியர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 1,562 பேர் ஆண்கள்; எஞ்சிய 141 பேரும் பெண்கள்.

அமெரிக்க ராணுவ விமானம் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மக்களவையில் கனிமொழி எழுப்பிய வினாக்களுக்குப் பதிலளித்த வெளியுறவுத் துணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங், அமெரிக்காவிலிருந்து 1700 இந்தியர்கள் வெளியேற்றம் செய்யப்பட்ட விபரங்களைத் தெரிவித்தார்.

கள்ளத்தனமாகக் குடியேறியதால் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் பட்டியலில் பஞ்சாபைச் சேர்ந்தவர்களே முதலிடத்தில் உள்ளனர்.

அந்த மாநிலத்தைச் சேர்ந்த 620 பேர் இதுவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

அடுத்ததாக, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 604 பேரும் குஜராத்தைச் சேர்ந்த 245 பேரும் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேரும் அந்தப் பட்டியலில் உள்ளனர்.